திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தத்தின் தம்பி ஸ்ரீதரன். தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினரான இவர், திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவராகவும் இருந்தவர்.இவரது குடும்பத்தை சேர்ந்த சிவசங்கரி என்பவர், கடந்த, 27ம் தேதி, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது அவரிடம், மற்ற பக்தர்களுக்கு மறைக்காமல் சுவாமி கும்பிட, அங்கிருந்த, தேசூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் காந்திமதி கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், பெண் இன்ஸ்பெக்டரை பக்தர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். அப்போது, திருவண்ணாமலை டவுன் டி.எஸ்.பி., குணசேகரன், தி.மு.க., பிரமுகர் ஸ்ரீதரனை காப்பாற்றும் விதமாக செயல்பட்டார்.இதையறிந்த டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவின்படி, திருவண்ணாமலை டவுன் போலீசார், ஸ்ரீதரன், சிவசங்கரி மற்றும் அங்கிருந்த கோவில் ஊழியர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர். இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் முன், ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். போலீசார் அனுமதி மறுத்ததால், அண்ணாதுரை சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேலுார் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட பொது செயலர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது, ஸ்ரீதரன் உள்ளிட்ட, மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.