மணப்பாறை அருகே நில அதிர்வு?
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சில பகுதிகள், புத்தாநத்தம், துவரங்குறிச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மதியம், 1:30 மணிக்கு, பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அப்போது வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், பொருட்கள் அதிர்வால் ஆடியதாக, அப்பகுதி மக்கள் கூறினர். இது ஒரிரு வினாடிகள் மட்டுமே நீடித்த நிலையில், மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பீதி அடைந்தனர்.இதுகுறித்து விசாரித்தபோது, மணப்பாறை அருகே வீரமலை மலைப்பகுதியில், கோவையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப்., பயிற்சி கல்லுாரி வீரர்கள், ஹெச்.பி., வகை துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொள்வதால், அங்கிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று மதியம், 12:30 மணிக்கே அவர்கள் பயிற்சியை முடித்து விட்டனர். அடுத்ததாக, அனியாப்பூர், இரட்டை கரடு என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில், பாறைகளை தகர்க்க, வழக்கத்துக்கு மாறாக அதிக அளவு வெடிபொருட்களை பயன்படுத்தி, வெடிச்சத்தமும், நில அதிர்வும் ஏற்பட்டிருக்கும் என்றும் பேசப்பட்டது.இதுகுறித்து மணப்பாறை வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பலமான இடி காரணமாக தான் வெடிச்சத்தமும், அதிர்வும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.