இலங்கை மத்திய மாகாண சபை தலைவரின் மண்டை உடைப்பு
திருச்சி: இலங்கையில் கண்டி, நுவரேலியா, மாத்தளை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, மத்திய மாகாண சபை தலைவராக இருப்பவர் நுவரேலியாவைச் சேர்ந்த யோகராஜன், 51. இவரும், சில நண்பர்களும், தன் நண்பரான சதாசிவம் இல்ல விழாவுக்காக, இலங்கையில் இருந்து திருச்சி வந்தனர். திருச்சி, தென்னுாரியில் உள்ள ஹோட்டலில் நண்பர்களுடன் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, அவரது அறையில் மது விருந்து நடந்துள்ளது. இதில், அதே விழாவுக்கு இலங்கையில் இருந்து வந்திருந்த யோகராஜனின் நண்பர் யோகேஷ் என்பவரும் பங்கேற்றுள்ளார். விருந்தின் போது, யோகராஜனும், யோகேஷும் அரசியல் பேசினர். அப்போது, இருவருக்கும் கருத்து மாறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த யோகேஷ், தன்னிடம் இருந்த பீர் பாட்டிலால், யோகராஜனை தலையில் தாக்கி, பீர் பாட்டில் கண்ணாடியால் கழுத்தில் கிழித்துவிட்டு தப்பியோடி விட்டார். உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட யோகராஜன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தில்லைநகர் போலீசில் யோகராஜன் அளித்த புகாரில், யேகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.