மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது
ஒடுகத்துார்:வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த பெரிய ஏரியூரைச் சேர்ந்தவர் மணி, 55; கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா, 50. இவர்களது மகன் ஆட்டோ டிரைவர் லோகநாதன், 29. அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 55. இவரது மனைவி உஷாராணி, 45. இவர்களது மகன்கள் கார்த்தி, 22, வெங்கடேசன், 23, ரஞ்சித்குமார், 27. இவர்கள், அனைவரும் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி, கூலி வேலை செய்கின்றனர். ராஜாவின் மகளுக்கும், மணி மகன் லோகநாதனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அன்று முதல், மனைவியை லோகநாதன் அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினமும் மனைவியை தாக்கினார்.ஆத்திரமடைந்த ராஜா மற்றும் அவரது மகன்கள் மூவரும் சேர்ந்து, லோகநாதன் வீட்டிற்கு சென்று, மணி, அவர் மனைவி மல்லிகா மற்றும் லோகநாதனை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர். வேப்பங்குப்பம் போலீசார், ராஜா, கார்த்தி, வெங்கடேசன், ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.