ரூ.13 கோடி ஜி.எஸ்.டி., நிலுவை கிறுகிறுத்து போன கூலி தொழிலாளி
வேலுார்: ஜி.எஸ்.டி., நிலுவை தொகை 13 கோடி ரூபாய் இருப்பதாக கூறி வங்கி கணக்கு முடக்கப்பட்டதால், வெல்டிங் தொழிலாளி கிறுகிறுத்து போய், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். வேலுார் மாவட்டம், குடியாத்தம், செதுக்கரையை சேர்ந்த ராமேஸ்வரன் அளித்த புகார் மனு விபரம்: நான் குடும்பத்துடன், 31 ஆண்டுகளாக ஒடிஷா மாநிலத்தில் தங்கி வெல்டிங் வேலை செய்து வருகிறேன். தற்போது என் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கியில் விசாரித்தபோது, ஜி.எஸ்.டி., நிலுவையில் இருப்பதாகவும், அதனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் சென்று கேட்டபோது, 13 கோடி ரூபாய் வரி நிலுவை இருப்பதாக தெரிவித்தனர். நான் எந்த தொழிலும் செய்யவில்லை. என் பெயரில் ஜி.எஸ்.டி., எண்ணும் கிடையாது. என் பான் கார்டு எண்ணை மர்ம நபர்கள் தவறாக பயன்படுத்தி ஜி.எஸ்.டி., வரி மோசடி செய்துள்ளனர். வங்கி கணக்கு முடங்கியதால் என் சம்பளம் உட்பட அன்றாட தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒடிஷா மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்தாலும், ராமேஸ்வரன் வீட்டு முகவரி உட்பட அனைத்து ஆவணங்களும் அவரது சொந்த ஊர் முகவரியில் உள்ளது. மேலும், கோவை ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இருந்து தான் அவருக்கு நோட்டீசும் அளித்துள்ளனர். இதனால் வேலுார் எஸ்.பி.,யிடம் அவர் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.