உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / குழந்தை கடத்தல் விவகாரத்தில் பஸ் டிரைவர், கூட்டாளி கைது

குழந்தை கடத்தல் விவகாரத்தில் பஸ் டிரைவர், கூட்டாளி கைது

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை, பவளக்கார தெருவை சேர்ந்தவர் வேணு, 33, ஐ.டி., ஊழியர்; இவரது மனைவி ஜனனி. தம்பதியின் மகன் யோகேஷ், 4, பிரீ.கே.ஜி., படிக்கிறார். வேணு நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்காக குழந்தையை டூ- - வீலரில் அழைத்து வந்தார். அப்போது முகமூடி அணிந்த நபர்கள், வேணு மீது மிளகாய் பொடி துாவி, குழந்தையை கடத்தினர். குடியாத்தம் நகர காவல் துறையினர், ஆறு தனிப்படைகள் அமைத்து, இரண்டு மணி நேரத்தில், திருப்பத்துார் மாவட்டம், மாதனுார், பெங்களூரு -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். இந்த வழக்கில் காமாட்சியம்மன் பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வேணுவின் தங்கையின் காதல் திருமணத்திற்கு, பாலாஜி உதவியதால், இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றும் பாலாஜி, அவ்வப்போது வாடகைக்கு கார் ஓட்டியும் வந்துள்ளார். சில தினங்களுக்கு முன், 'இன்னோவா' காரை ஓட்டி செல்லும்போது சென்னை, சுங்குவார்சத்திரம் அருகே விபத்து ஏற்பட்டது. இதற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவு ஆனதாக தெரிகிறது. இதில் நான்கு லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் மூலம் பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள, 4 லட்சத்தை விபத்தை ஏற்படுத்திய பாலாஜி தான் தர வேண்டும் என, கார் உரிமையாளர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே இருந்த முன்விரோதம் மற்றும் 4 லட்சம் ரூபாய் பணத்திற்காக, வேணுவின் குழந்தையை திட்டமிட்டு, பாலாஜி, தன் கூட்டாளி விக்ரம் என்பவரோடு கடத்தியுள்ளார். காவல் துறையினர் தீவிரமாக தேடுவதை அறிந்ததும், குழந்தையை மாதனுார் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் விட்டு சென்றுள்ளார். மேலும், ஒன்றும் தெரியாதது போல, குழந்தையின், தந்தை நண்பர்களுக்கு போன் செய்து, குழந்தை மாதனுார் அருகே இருப்பதாக, தனக்கு தகவல் வந்ததாக கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். விக்ரம் என்பவரையும் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !