உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க உத்தரவு

ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க உத்தரவு

வேலுார்: தொடர்மழை காரணமாக, வேலுார் கோட்டை அகழியின் நீர்மட்டம் உயர்ந்து, ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் வெள்ளம் புகுந்த நிலையில், நிரந்தர தீர்வுக்கு விஜய நகர நாயக்கர் கால அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மோந்தா புயல் காரணமாக, வேலுாரில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையால்,வேலுார் கோட்டை அகழியின் நீர்மட்டம் உயர்ந்து, கோட்டையினுள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். விஜயநகர நாயக்கர்கள் காலத்தில் கோட்டை அகழியில் நீர்மட்டம் அதிகரிக்கும் போது, உபரி நீர் வெளியேற இரண்டு நீர்வழிப்பாதைகள் இருந்தன. தற்போது நீர்வழிப்பாதைகள் துார்ந்து, உபரி நீர் வெளியேற முடியாமல், கோவில் வளாகத்தில் நீர் தேங்குகிறது. தற்போது, கோவில் நிர்வாகம் சார்பில் இரு ராட்சத மோட்டார்களை வைத்து 24 மணி நேரமும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 5வது நாளான நேற்று ஓரளவு மழைநீர் வடிந்தது. இந்நிலையில், கோவிலில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கலெக்டர் சுப்புலட்சுமி கூறியதாவது: ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும். மீன் மார்க்கெட், பழைய பைபாஸ் சாலை அருகே கோட்டை அகழியின் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

திறந்தவெளியில் தங்க தேர்

சென்னையை சேர்ந்த அபிராமி - ராமநாதன் குடும்பத்தினர், 2023ல் ஜலகண்டேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு பிரம்மோத்சவ விழாவிற்காக தங்கத்தேரை நன்கொடை வழங்கினர். தங்கத்தேர் இரண்டரை ஆண்டுகளாக மழை, வெயிலில் கூரை ஏதும் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. வேலுார் டவுன்ஹாலில் உள்ள இடம் அல்லது தகுந்த வேறு இடத்தில் தங்கத்தேரை பாதுகாப்பாக நிறுத்த இடம் ஒதுக்கி தர வேண்டும் என, கலெக்டரிடம் கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். வேலுார் கோட்டை அகழி, ஜலகண்டேஸ்வரர் கோவில் இந்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தொல்லியல் துறையினரிடம் கேட்ட போது, 'இந்திய தொல்லியல் துறை சட்டத்தின் படி, பாரம்பரிய சின்னங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதியில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ