மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்
வேலூர்: ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் 'கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் வேலூரில் இன்று (08/12/2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வேலூர் தொழிநுட்பக் கல்லூரி துணைத் தலைவர் திரு. செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் சின்னத்திரை கலைஞர் ஈரோடு மகேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஈஷா சார்பில் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. மொத்தம் 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் 5,000 அணிகளில் 43,000 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இரண்டாம் கட்டமாக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் 6 இடங்களில் நடைபெற்றது. கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர். வேலூர் வசந்தபுரம், கொசப்பேட்டை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான கிராமோத்சவ திருவிழாவை வேலூர் தொழிநுட்பக் கல்லூரி துணைத் தலைவர் திரு. செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கார்த்திகேயன் அவர்கள் வழங்குகினார்.