வனக்காவலர் வீட்டில் 9 சவரன் நகை கொள்ளை
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வனக்காவலர் வீட்டில், 9 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உளுந்தூர்பேட்டை, சின்னசாமி நகரை சேர்ந்தவர் நசீர்அகமது, 57; கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி வனச் சரகத்தில் காவலராக பணிபுரிகிறார். இவர், கடந்த 22ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன், வௌியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு திரும்பிவந்தபோது, வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து உள்ளே இருந்த 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்த புகாரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.