உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நரிக்குறவர் காலனி மக்களின் பொது வழி அடைப்பு சப்கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்று வழி ஏற்பாடு

நரிக்குறவர் காலனி மக்களின் பொது வழி அடைப்பு சப்கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்று வழி ஏற்பாடு

திண்டிவனம் : திண்டிவனத்தில் நரிக்குறவர் காலனி மக்கள் பயன்படுத்தி வந்த பொது வழியை மூடியது தொடர்பாக, சப்கலெக்டர் விசாரணை நடத்தினார். திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட, நத்தமேடு பகுதியில், நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 70 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வந்த பகுதி, நீர்நிலை புறம்போக்கு என்பதால், இவர்களுக்கு திண்டிவனம் அருகே கட்டளை கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கு வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நரிக்குறவர் காலனி மக்கள், மானுார் கிராமத்தை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தை பொது வழியாக பயன்படுத்தி வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த தனியாருக்கு சொந்தமான இடம் வேலி போட்டு யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு தடுக்கப்பட்டது. இதற்கு நரிக்குறவர் காலனியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் அந்த வழியை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்த பிரச்னை குறித்து, திண்டிவனம் சப்கலெக்டர் திவ்யான்சு நிகம், தாசில்தார் சிவா உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, நரிக்குறவ மக்களிடம் விபரம் கேட்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக சப்கலெக்டர் உத்தரவின் பேரில், நரிக்குறவர் மக்கள் அதே பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான இரண்டு வழிகளை மாற்றுப்பாதையாக பயன்படுத்தி கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி