| ADDED : ஆக 09, 2024 04:41 AM
விழுப்புரம்: 'போக்குவரத்துக் கழகம் சிறப்பாக இயங்கிட தொழிற்சங்கத்தினர் ஒற்றுமையாக செயல்படவேண்டும்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், புதிய பஸ்களை துவக்கி வைத்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கான பஸ் சேவைகளை மேம்படுத்திட கூடுதல் பஸ்களை, புதிய வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்காக ரூ.9.65 கோடி மதிப்பீட்டில், 12 புதிய மகளிர் இலவச பயண டவுன் பஸ்கள் மற்றும் 13 புதிய புறநகர பஸ்கள் துவக்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் கோட்டத்திற்கு இந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 371பஸ்களில், தற்போது, 191 புறநகர் பஸ்கள் மற்றும் 36 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. அதில், விழுப்புரம் மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 81 பஸ்களில் இதுவரை 36 பஸ்கள் இயக்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.மறைந்த முதல்வர் கருணாநிதி காலத்தில் தான், தனியார் வசமிருந்த பஸ் சேவை அரசுடமையாக்கி, அரசு போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. அப்போது, எங்கள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் கோட்டத்தையும் உருவாக்கினர்.நான் அமைச்சராக இருந்த போதுதான், இங்குள்ள பலர், போக்குவரத்து கழகத்திற்கு வேலைக்கு வந்தனர். தொழிற் சங்கத்தினர், தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றினால் தான் போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட முடியும்.முதல்வர், போக்குவரத்துக் கழகத்திற்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, தொழிலாளர்கள் தங்கள் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.