| ADDED : ஜூலை 08, 2024 04:55 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மாத உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், வாழ்நாள் சான்று வழங்காதவர்கள், வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பித்து, 2024-25ம் ஆண்டிற்கான பராமரிப்பு உதவித்தொகையை பெற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக, மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அறிவுசார் குறைபாடுடையோர், கைகால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர். பார்கின்சன் நோய், தண்டுவட மறுப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர்களுக்கு, பராமரிப்பு உதவித்தொகை மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டங்களின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாய் பெறும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றோர், பாதுகாவலர் நேரில் வருகை புரிந்து (மாற்றுத்திறனாளியை நேரில் அழைத்து வர வேண்டாம்) வாழ்நாள் சான்று படிவம் பெற்றுக்கொள்ளலாம்.அல்லது மாவட்ட இணையதள முகவரி villupuram.nic.inல் பதிவிறக்கம் செய்து, அதில் தங்கள் பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று (உயிருடன் உள்ளார் சான்று) மற்றும் வருவாய் துறை மூலமாக அரசு உதவிதொகை.இன்றைய தேதிவரை வழங்கப்படவில்லை என சான்று பெற்று, அத்துடன் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை. குடும்ப அட்டை நகல் ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஒன்று உதவித்தொகை பெற்று வரும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 04146 290543 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.