| ADDED : ஆக 08, 2024 12:32 AM
விழுப்புரம், : திண்டிவனம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர், தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் போலீசார் கடந்த மாதம் 2ம் தேதி, ரோந்து சென்றபோது, நல்லாவூரைச் சேர்ந்த செங்கபால் மகன் கதிரவன், 21; என்பவர் கொந்தாமூர் மலைக்குட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் அளவு எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், நல்லாவூர் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நல்லாவூரைச் சேர்ந்த வெங்கடசேன் மகன் அஜய், 23; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த கிளியனூர் போலீசார் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.தொடரும் இவர்களது குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், இருவர் மீதும் தடுப்புக்காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி, இருவரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இதனையடுத்து, கிளியனுார் போலீசார் வெவ்வோறு வழக்கில் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் உள்ள கதிரவன், அஜய் ஆகிய இருவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.