உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் இன்று த.வெ.க., மாநாடு பாதுகாப்பு பணிக்கு 6,000 போலீசார் குவிப்பு

விக்கிரவாண்டியில் இன்று த.வெ.க., மாநாடு பாதுகாப்பு பணிக்கு 6,000 போலீசார் குவிப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்85 ஏக்கர் பரப்பளவிலான திடலில் நடக்கிறது. மாநாடு மாலை 4:00 மணிக்கு துவங்குகிறது. கட்சி தலைவர் விஜய் தலைமை தாங்கி, கட்சிக் கொடியேற்றி வைத்து பேசுகிறார். அப்போது, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து செயல்படக்கூடிய திட்டங்கள் உள்ளிட்ட மிக முக்கிய அறிவிப்புகளை வெளிடுகிறார். மாநில பொதுச் செயலாளர் புஸ்சிஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பேச உள்ளனர்.மாநாட்டில் மாலை 3:00 மணி முதல்பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாநாட்டிற்கு முன் விஜய் வந்து ஓய்வெடுக்க இரு கேரவன்கள் தயார் நிலையில் மாநாட்டின் திடல் முன் நிறுத்தப்பட்டுள்ளது.மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு மாநாட்டு திடலை பார்வையிட நேற்று காலை முதல் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். ஆனால், மாநாட்டு திட்ட போலீஸ் மற்றும் தனியார் நிறுவன பவுன்சர்கள் கட்டுப்பாட்டிற்கு வந்ததால், யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், பொதுமக்கள் வெளியில் இருந்து மாநாட்டு முகப்பை பார்த்துவிட்டு சென்றனர். மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த 4 இடங்களில் 207 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வழங்க, 5லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கெட், ஸ்நாக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று உணவு, மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம், அவரவர் வாகனங்களிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் 6,000 போலீசார் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

18 பொருட்களுக்கு தடை .

மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மது, பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், செல்பி ஸ்டிக், வீடியோ கேமரா, ட்ரோன், பைக், சைக்கிள், சட்ட விரோத பொருட்கள், பிற அரசியல் கட்சி கொடி உள்ளிட்ட 17 வகை பொருட்களை கொண்டு வரவும், செல்லப்பிராணி உள்ளிட்ட விலங்குகளை அழைத்துவர தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை, மாநாட்டு முகப்பில் நேற்று மாலை வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை