உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி : கலெக்டர் அறிவுறுத்தல்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி : கலெக்டர் அறிவுறுத்தல்

விழுப்புரம்: மாவட்டத்தில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு: தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய் வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த, 2018ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6:00 முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலன் பாதிப்புகள் குறித்தும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !