| ADDED : பிப் 13, 2024 04:38 AM
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை நாளை 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக 2.64 லட்சம் லோடு செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று, விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து, கோர்ட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, கவுதம சிகாமணி எம்.பி., ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோர் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை நாளை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.