| ADDED : மார் 16, 2024 11:42 PM
விழுப்புரம்: லோக்சபா தேர்தல், நன்னடத்தை விதிமுறைகள் குறித்து, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:லோக்சபா தேர்தல், நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது. பிரசாரத்தின்போது, எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ எந்த ஜாதியையும், மதத்தையும் வெறுப்பை துாண்டும் வகையில் பேசவும், ஈடுபடவும் கூடாது. அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யும்போது, கட்சியின் கொள்கை குறித்தோ அல்லது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் இருக்க வேண்டும். தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருத்தல் கூடாது.வழிப்பாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. ஓட்டுகள் சேகரிப்பதற்கு மதம் ஒரு தடையல்ல. தேர்தல் பணிக்காக வேட்பாளர் வாகனங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும்.அனுமதியின் அசல் நகலை வாகனத்தின் முன் ஒட்ட வேண்டும். ஒரு வேட்பாளருக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியை வேறு வேட்பாளர் பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.கல்வி நிலையங்களையோ, அதன் விளையாட்டு மைதானத்தையோ அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் விளம்பரங்கள் எழுதக் கூடாது. பிளாஸ்டிக் அல்லது பாலிதீன் கொண்டு விளம்பர சுவரொட்டி, பேனர்கள் தயாரிப்பதை தவிர்க்க வேண்டும்.தேர்தல் தொடர்பாக பொதுக் கூட்டங்கள் நடத்துவதோ அல்லது ஊர்வலங்கள் போகவோ காவல் துறையிடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும். மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் பொறுப்புள்ள ஜனநாயகம் அமைய ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.