விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது... அவசியம்; ஜனவரிக்குள் பதிவு செய்ய அறிவுரை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 2024--25ம் ஆண்டிற்கு ராபி, நவரை பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள நெல் பயிர், மணிலா, எள் மற்றும் கரும்பு பயிர்களுக்கு, அவசியம்பயிர் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், மத்திய அரசு சார்பில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் நவரை பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 794 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நவரை பருவத்தில் நெல்- நடவு செய்துள்ள விவசாயிகள் 31.01.2025-க் குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதன்படி, அறிவிக்கப்பட்ட பயிர், விவசாயிகள் ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம், கடைசி தேதி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.நெல் பயிருக்கு பிரிமியம் ரூ.517.5, கடைசி தேதி 31.01.2025,மணிலா பயிருக்கு பிரிமியம் ரூ.442.5, கடைசி தேதி 20.01.2025, எள் பயிருக்கு பிரிமியம் ரூ.165, கடைசி தேதி 31.01.2025 கரும்பு பயிருக்கு பிரிமியம் ரூ.1045 கடைசி தேதி 31.03.2025. இதற்காக, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத்தொகை செலுத்தி பதிவு செய்யலாம்.விவசாயிகள், தங்களது நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்யலாம். விவசாயி பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து, விவசாயிகள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களை அறிய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அனுகலாம்.எனவே, நவரை பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் 31.1.2025க் குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு, மாவட்ட வேளாண்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.