விவசாயிகள், கல்வி நிறுவனங்களுக்கு மரக்கன்றுகள் : வனத்துறை வழங்கல்
திண்டிவனம்: திண்டிவனம் வனத்துறை மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை இதுவரை விவசாயிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் விவசாய நிலங்களாகவும், வனப்பகுதிகளாகவும் உள்ளன. கடந்த காலங்களில் வனப்பகுதிகளில் அதிகளவில் மரங்கள் இருந்தன. நாளடைவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. தற்போது சொற்ப அளவிலான மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பருவம் தவறிய மழையால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு விவசாயிகளுக்கு இலவச மரக்கன்கறுகளை வழங்கி, மரங்கள் வளர்ப்புக்கான திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. திண்டிவனம் வனத்துறை மூலம் பல்லுயிர் பெருக்க மேலாண்மைத் திட்டம், பசுமைத் தமிழக திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்த மரக்கன்றுகள் செழிப்பாக வளர்ந்துள்ளன. முதல் கட்டமாக பல்லுயிர் பெருக்க மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, தேக்கு, செம்மரம், நாவல், புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 9 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலை துறைக்கு வழங்கவும், எஞ்சிய மரக்கன்றுகள் இருப்பில் இருப்பதாகவும் வனத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.