பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல் : கண்டமங்கலம் அருகே மூவர் கைது
கண்டமங்கலம்: பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பு குட்கா பொருட்களை, கண்டமங்கலத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், டி.எஸ்.பி.,யின் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கண்டமங்கலம்-புதுச்சேரி சாலையில் நவமால்காப்பேர் மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த ராஜஸ்தான் பதிவெண் கொண்ட இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கார்களில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நாம்பள்ளி பகுதியை சேர்ந்த விஜியகுமார், 44; ராஜஸ்தான் மாநிலம் பூனாசா பகுதியை சேர்ந்த ஹக்கீம், 30; ராஜஸ்தான் மாநிலம் ரபாரிவாஸ் பகுதியை சேர்ந்த நிலேஷ்குமார், 34; என்பதும், மூவரும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு கார்களில் 476 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். மூவரையும் நேற்று விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.