ஏரி கரையோரங்கள், ஆகாய தாமரைச் செடிகள்... ஆக்கிரமிப்பு; துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஏரிக்கரையோர ஆக்கிரமிப்புகளையும், ஏரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைச் செடிகளை முழுதுமாக அகற்றி துார்வாரி ஆழப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் 300 ஏக்கர் பரப்பளவும், இரண்டு கலிங்கல் மற்றும் 5 மதகுகளை உடைய இந்த பேரூராட்சி ஏரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த ஏரியின் நடுவே நான்கு வழி புறவழிச்சாலை செல்கிறது.விக்கிரவாண்டி கிழக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள இந்த ஏரி பெரிய ஏரி, சிறிய ஏரி, அரண்டேரி என அழைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.பாசன வசதி அளவு அதிகமாக இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஏரியில் அடர்ந்துள்ள ஆகாய தாமரைச் செடிகள், முள் மரங்கள்அடர்ந்து ஆக்கிரமித்துள்ளதால் மழைக் காலங்களில் போதிய அளவு தண்ணீர் தேங்கி நிற்பது இல்லை.இதனால் விவசாயிகள் 400 ஏக்கர் அளவிற்குதான் ஏரி பாசனத்தை நம்பி நெற் பயிர் சாகுபடி செய்கின்றனர். அதுவும் ஒரு போகம் மட்டுமே ஏரி பாசன வசதி பெற முடிகிறது.ஏரிகளை பராமரிக்கும் விதமாக கடந்த 2007ம் ஆண்டு ஏரியை சீரமைத்தனர். அதன் பிறகு 2008 முதல் 2010ம் ஆண்டு வரை விக்கிரவாண்டி ஏரியில் நான்கு வழிச்சாலை அமைக்க ஏரியில் மண் எடுத்த போது பல இடங்களில் பள்ளம் உருவாகியது. இதனால் ஏரியில் நீர் தேங்கினாலும் பாசனத்திற்கு பயனற்று போனது.கடந்த 2012ம் ஆண்டு ஏரி பாசன வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினர் ஆழப்படுத்தி 30 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் வாய்க்கால் அமைத்தனர். அதன் பிறகு கடந்த 13 ஆண்டுகளாக ஏரியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.அரசு துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் ஏரியின் சுற்றுப்புறங்களில் குடியிருப்போர் தங்கள் வசதிக்காக கரையோரங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றனர்.தமிழக அரசு, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் கோடை காலத்தில் விக்கிரவாண்டி ஏரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைச் செடிகளை அகற்றி, கரையை பலப்படுத்த தேவைப்படும் மண்களை ஏரி மதகு பகுதியில் அள்ளி சீரமைத்தால் அப்பகுதியில் ஆழம் ஏற்பட்டு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தேங்கி நிற்க வசதியாகும். இதனால் நிலத்தடி நீர் அதிகரித்து விக்கிரவாண்டி பகுதி பொதுமக்களின் தண்ணீர் பற்றாக்குறையும் நீங்கும்.அதேபோன்று ஏரிக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய முகப்பு பகுதியான மேலக் கொந்தையில் வாய்க்காலில் அடர்ந்து முளைத்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.