வேளாண் துறையில் ரூ.70 கோடி கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் 70 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் விழுப்புரம் மாவட்டத்திற்கு 70 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிக்கு .2 கோடி கடன், 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுயஉதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், மெழுகு பூசும் மையங்கள், பண்ணைக் கழிவு மேலாண்மை சார்ந்த உட்கட்டமைப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க கடன் பெறலாம். இதற்கு https://agriinfra.dac.gov.inஎன்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையோடு வங்கி கிளைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் பெற, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, நபார்டு வங்கி, வேளாண் தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண் பொறியியல் துறை, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.