சேறு வீசிய சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை அமைச்சர் பொன்முடி விளக்கம்
விழுப்புரம் : 'விழுப்புரத்தில் என் மீது சேற்றை வீசிய நிகழ்வு அரசியலுக்காகவே நடந்துள்ளது. அதனை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை' என அமைச்சர் பொன்முடி கூறினார்.விழுப்புரம் அடுத்த அரசூர், இருவேல்பட்டு பகுதியில், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென சிலர் சேற்றை வாரி வீசியதில், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் முன்னாள் எம்.பி., கவுதம்சிகாமணி, கலெக்டர் பழனி உள்ளிட்டோர் மீது சேறு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அரசியல் செய்வதற்காகவே சிலர், வேண்டுமென்றே சேற்றை வீசியுள்ளனர். என் மீதும், அதிகாரிகள் சட்டையிலும் பட்டது. யார் அதனை செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நபர் எந்த கட்சியை சேர்ந்தவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது கட்சி நிர்வாகிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையும் பலருக்கும் தெரியும். சேறு அடித்தவர்கள் குறித்து கவலையில்லை. இதனை வைத்து அரசியலாக்க அவர்கள் விரும்பினர். ஆனால், நாங்கள் அதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை. மழை நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துகிறோம். பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் மழை நிவாரணம் ரூ.2,000 போதவில்லை என கூறியுள்ளார். அவர், மத்திய அரசிடம் வலியுறுத்தி, கூடுதலாக நிதி பெற்றுத்தரலாம்.இவ்வாறு பொன்முடி கூறினார்.