செஞ்சியில் எம்.எல்.ஏ., சிபாரிசு; ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு
செஞ்சியில், காந்தி பஜார், திருவண்ணாமலை சாலையில் ஆக்கிராமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பஸ் நிலைய பகுதியில் கடைகளை தார் சாலையில் நடத்துகின்றனர். திருவண்ணாமலை சாலையில் தார் சாலையை ஒட்டி நடத்தும் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் அதிருப்தியில் இருப்பதுடன், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீது ஏராளமான விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து கடந்த வாரம் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், செஞ்சி கூட்ரோட்டில் பஸ்களை நிறுத்த 3 லேன்களை உருவாக்கவும், மின் கம்பங்களை உள்ளே நகர்த்தி சாலையை விரிவு படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேலைகளை நேற்று துவங்க இருந்தனர். இந்நிலையில் செஞ்சி வர்த்தகர் சங்கத்தினர் நேற்று மஸ்தான் எம்.எல்.ஏ., வை சந்தித்து தீபாவளி விற்பனை நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என கேட்டு கொண்டனர். இதையடுத்து காவல் துறையினரிடம் தீபாவளி முடியும் வரை ஆக்கிரமிப்பு அகற்றத்தை ஒத்தி வைக்குமாறு எம்.எல்.ஏ., கேட்டு கொண்டார். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றத்தை போலீசார் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். ஒழுங்குபடுத்தலாம் தீபாவளி விற்பனை நேரத்தில் வழக்கத்தை விட நெரிசல் அதிகமாக இருக்கும். ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு கூடுதல் சிரமம் இருக்கும். எனவே திருவண்ணாமலை ரோட்டிலும், பஸ் நிலையம் பகுதியிலும் தார் சாலையிலும், தார் சாலையை ஒட்டி உள்ள பகுதியிலும் உள்ள கடைகளை உள் பக்கமாக சாலை ஓரம் நகர்த்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் விற்பனை நடத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.