விழுப்புரம் சுற்றுப்பகுதி கிராமங்களில் அறுவடைக்கு தயாரான பன்னீர் கரும்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பன்னீர் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விழுப்புரம் அடுத்த பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம், பேரங்கியூர், கரடிப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் ஆண்டுதோறும் பன்னீர் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். ஏப்ரல், மே மாத காலங்களில் பன்னீர் கரும்பு நடவு செய்து, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். குறிப்பாக, தை பொங்கல் பண்டிகை கொண்டாடும் மக்கள், பன்னீர் கரும்பு வைத்து படையலிட்டு வருகின்றனர். இந்தாண்டும், விழுப்புரம் அடுத்த பிடாகம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இந்த கரும்பை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.