பொது வழிப்பாதை பிரச்னை: தொழிலாளி தர்ணா
விழுப்புரம் ; விழுப்புரம் அருகே வீட்டுக்கான பொது வழிபாதை பிரச்னை தீர்கக்கோரி, தொழிலாளி குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.விழுப்புரம் அருகே ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்,65; இவர், நேற்று காலை தனது மனைவி, மகள், பேரன்களுடன் குடும்பத்தோடு மனு கொடுக்க வந்தார். அவர்கள், திடீரென கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறியதாவது: நாங்கள் குடியிருக்கும் எங்களது வீட்டில், 4 அடி அளவில் பொதுவழி விட்டு கட்டியுள்ளோம். இந்த பொது வழிபாதையை, எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, வழிவிடாமல் தடுக்கின்றனர். இதுகுறித்து, காவல்துறை, வருவாய்துறையில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, உரிய நடவடிக்கை எடுத்து பொதுவழி பாதையை மீட்டுதர வேண்டும் என்றனர். அங்கிருந்த போலீசார், அவர்களிடம் மனுவை வாங்கிக்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி, அனுப்பி வைத்தனர்.