ரேஷன் அரிசி கடத்தல் : ஒருவர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில், விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராமத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோவில் பின் பகுதியில், ஒருவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த நபரை விசாரித்ததில், அவர் கடலுார் மாவட்டம், சூரக்குப்பம் பகுதியை சேர்ந்த நந்தகோபால்,70; என்பதும், ப.வில்லியனுார், அரசமங்கலம், பூவரசன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வந்து, அதனை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாலையோர உணவகங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து, நந்தகோபாலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து தலா 50 கிலோ கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியை (ஒரு டன்) பறிமுதல் செய்தனர்.