மாணவர்கள் வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வேண்டும் ஆச்சார்யா கல்வி நிறுவன தலைவர் அரவிந்தன் அட்வைஸ்
விழுப்புரம்: 'மாணவர்கள் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என, ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேசினார். விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி துவக்க விழாவில், அவர் பேசியதாவது: பாத்திரங்ளை போல நிறைய பேர் தங்களின் வாழ்க்கையை மூடியே வைத்துள்ளனர். பாத்திரங்களை மூடாமல் திருப்பி வைத்தால் தான் அதன் தன்மை தெரியவரும். உள்வாங்கும் தன்மை அதிகரிக்கும். அதே போல்தான் மனிதர்கள் தங்களின் அறிவை திறந்து வைத்தால் தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். பணம் சம்பாதிக்க 2 வழிகள் உள்ளது. சங்க நிதி மூலம், குழுக்களாக சேர்ந்து பணத்தை சம்பாதிக்கலாம். கட்டமைப்பை ஏற்படுத்தி சுலபமாக மூலதனத்தோடு பணத்தை ஈட்டலாம். அடுத்ததாக, மூலதனம் இல்லாமல் பத்மநிதி மூலம் பணத்தை சம்பாதிக்கலாம். இதற்கான மூலதனம் சரஸ்வதி ரூட்டாகும். இந்த பத்ம நிதியில் ஐடியாக்களை புகுத்த வேண்டும். கிரியேட்டிவ் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். பட்டம் வினாடி வினா போட்டியில் கடந்தாண்டு, இந்த பள்ளி மாணவர்கள் இறுதி போட்டி வரை வந்தனர். இந்தாண்டு நீங்கள் வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். இன்றுள்ள உலகில் தகவல் பரிமாற்றம் பொக்கிஷமாக இல்லை. எந்த தகவலும் சுலபமாக நாம் கையில் இருந்தே பெற முடிகிறது. 'ஏ.ஐ' யை விட மாணவர்கள் வேகமாக உள்ளனர். உடனுக்குடன் பதில் தருகின்றனர். வாசிப்பு திறன் எனது வாழ்வை நன்றாக மாற்றியுள்ளது. எங்கள் பள்ளியிலும் மாணவர்கள் வாசிப்பு திறனை உருவாக்குவதற்காக புத்தகங்களை பயில வைத்துள்ளோம். இன்றுள்ள வாசிப்பு திறன் அடுத்த தலைமுறைக்கு இருக்காது. தேர்வு முறையே எலக்ட்ரானிக்சில் வந்துவிடும். வாசிப்பு திறன் ஆடியோ மூலம் தான் கேட்கப்படும். உங்களுக்கு வாசிப்பு திறன் கிடைத்துள்ளது. கொடுத்து வைத்த தலைமுறை நீங்கள். வாசிப்பு திறனை மாணவர்கள் நினைத்தால் வளர்க்கலாம். படிப்பை புரிந்து பயிலுங்கள். நீங்களும் வாசிக்கும் தன்மையை மேம்படுத்தலாம். பட்டம் இதழ் பயிலும் நீங்கள் எல்லாவற்றையும் கற்று கொள்ளலாம். இவ்வாறு அரவிந்தன் பேசினார்.