சென்னைக்கு அணிவகுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
விக்கிரவாண்டி: ஆயுதபூஜை விடுமுறை முடிந்து, சென்னைக்கு வாகனங்கள் அணிவகுத்ததால், விழுப்புரம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் ,ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கடந்த 29 ம் தேதி முதல் சொந்த ஊருக்கு சென்றனர். கார், பஸ், வேன் என 82 ஆயிரம் வாகனங்கள் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி டோல்பிளாசாவை கடந்து சென்றன. விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பதால் நேற்று முன்தினம் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்பின. நேற்று காலை 11:00 மணி முதல் சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து அணிவகுத்து சென்றன. சாலை சந்திப்புகளில்வாகனங்கள், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . வாகனங்கள் அதிகமாக சென்றதால் டோல் பிளாசாவில் 8 லேன்கள் (வழிகள்) திறக்கப்பட்டது. அதே நேரத்தில் திருச்சி நோக்கி வாகனங்கள் அதிகரிக்கும் நேரத்தில் வாகன போக்குவரத்திற்கு தகுந்தார்ப்போல் கூடுதலாக திருச்சி நோக்கி இரு லேன்கள் திறக்கப்பட்டு தலா 6 லேன்களில் இருபுறமும் வாகனங்கள் நெரிசலின்றி கடந்தன நேற்று முன்தினம் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை 42 ஆயிரம் வாகனங்களும், நேற்று இரவு 7:30 மணி வரையில், 41 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. சாலைகளில் போக்குவரத்து அதிகரித்ததால் விழுப்புரம் எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன்,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ் ,லோகநாதன் மற்றும் டோல் பிளாசா ஊழியர்கள் போக்குவரத்து பாதிப்பின்றி வாகனங்கள் செல்ல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காத்திருக்கும் நிலை தவிர்ப்பு
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்பிளாசாவை கடந்து சென்னை நோக்கி சென்றன. ஆனால், கடந்த காலங்களைப் போல், சுங்க கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டோல்பிளாசாவை கடந்து சென்றன. வாகன உரிமையாளர்கள், 99 சதவிகிதம் பேர் 'பாஸ்டேக் ரீசார்ஜ்' செய்து விடுகின்றனர். அத்துடன், மத்திய அரசு கடந்த ஆக., 15ம் தேதி கொண்டுவந்த வருடாந்திர பாஸ் கட்டணத்திற்கும் பெரும்பானோர் மாறியுள்ளதாலும், கட்டணம் செலுத்த காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டது. இதனால், டோல் பிளாசாவில் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாகனங்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 150 வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலையும், விடுமுறை நாட்களில் சராசரியாக, 200 வாகனங்கள் கட்டணம் செலுத்தி செல்லும் நிலை உள்ளது. கடந்த பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஒருநாளைக்கு 55 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளாசாவை கடந்து சென்றுள்ளன. தினமும் சராசரியாக 24 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாகனங்கள் பிளாசாவை கடந்து செல்வது வழக்கம். நேற்று இரவு 8:30 மணிவரை 42,300 வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்து சென்ற நிலையில், நள்ளிரவு 12:00 மணிக்குள் 50 ஆயிரத்தை கடந்துவிடும் என, டோல்பிளாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.