உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காவேரி கூக்குரல் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!

காவேரி கூக்குரல் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!

விருதுநகர்: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (03-06-2024) ராஜபாளையத்தில் நடைப்பெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். தங்கப்பாண்டியன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தனுஷ் எம் குமார் அவர்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்து இந்நிகழ்வை தொடங்கி வைத்தனர். சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள சக்கராஜா கோட்டை மைதானத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தனுஷ் எம் குமார் மற்றும் நகராட்சி சேர்மன் திருமதி பவித்ரா ஷியாம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு இந்நிகழ்வை துவங்கி வைத்தனர். இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 2,75,000 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ