உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழி அரசு கல்லுாரியில் ஆங்கில தேர்வு நடத்தாததால் 38 மாணவர்கள் பெயில்

திருச்சுழி அரசு கல்லுாரியில் ஆங்கில தேர்வு நடத்தாததால் 38 மாணவர்கள் பெயில்

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலைக் கல்லுாரியில் அடிப்படை ஆங்கிலம் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் தேர்வு நடத்தாததால் 38 மாணவர்கள் 'பெயில்' ஆக்கப்பட்டனர். திருச்சுழி அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பிஎஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 15 பேராசிரியர்கள் உள்ளனர். நவ. 24ல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வினாத்தாள்கள் வழங்கப்பட்டு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பி.ஏ.,ஆங்கில பாடப்பிரிவில் வரும் அடிப்படை ஆங்கிலம் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் தேர்வு இன்டெர்னல், எக்ஸ்டர்னல் நடத்தப்படவில்லை. இதையடுத்து வெளியான தேர்வு முடிவில் அடிப்படை ஆங்கில பிரிவில் மட்டும் இன்டெர்னல் நடத்தாமலேயே மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. எக்ஸ்டர்னல் மார்க் வழங்காததால் 38 மாணவர்களும் பெயில் ஆக்கப்பட்டனர். அதனால் செய்வதறியாது மிகுந்த மன வேதனைக்குள்ளாகியுள்ளனர். மாற்று ஏற்பாடு செய்து தேர்வு எழுத அனுமதித்து எக்ஸ்டர்னல் மார்க் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர். கல்லுாரி முதல்வர் எஸ்தர் கூறுகையில்'' தேர்வு நடத்தாதது குறித்து உயர்கல்வித்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறேன். அதற்குப் பின் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். ஏன் தேர்வு நடத்தவில்லை என்பது குறித்து விசாரித்து வருகிறேன்'' என்றார். கல்லுாரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன் கூறுகையில் ''எனக்கு எந்த தகவலும் வரவில்லை. தற்போது தான் தெரிய வந்துள்ளது. கல்லுாரி முதல்வரிடம் விசாரித்தேன். ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பரிந்துரை செய்யப்படும் ''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை