உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தண்ணீரின்றி வறண்ட ஆனைக்குட்டம் அணை

தண்ணீரின்றி வறண்ட ஆனைக்குட்டம் அணை

சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை அர்ஜுனா ஆற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட அணையில் 9 மதகுகள் உள்ளது. திருத்தங்கல் செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாக உள்ளது. இதனை நம்பி நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.ஆனால் தற்போது ஒரு ஹெக்டர் பாசன வசதி கூட இல்லை. மேலும் விருதுநகர், திருத்தங்கல் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த அணைக்கு திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் நிறைந்து ஓடை வழியாக தண்ணீர் வரும். தவிர எம்.புதுப்பட்டி, சித்தநாயக்கன்பட்டி கிராமங்கள் வழியாக செல்கின்ற அர்ஜுனா ஆற்றில் மழை பெய்தால் தண்ணீர் வந்து அணையில் தேக்கி வைக்கப்படும்.சமீபத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து பிளவக்கல் அணை வெம்பக்கோட்டை அணை உள்ளிட்ட அணைகளுக்கு ஓரளவிற்கு தண்ணீர் வந்து நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் 27 அடி உயரம் கொண்ட ஆனைக்குட்டம் அணையில் ஒரு அடி மட்டுமே தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீரும் தற்போது வற்றி வறண்டு காணப்படுகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரையிலும் அணை நிரம்பியது இல்லை. மழையால் தண்ணீர் வந்தவுடன் மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். மேலும் அணை பலவீனமாக இருப்பதால் கடந்த காலங்களில் 18 அடி உயரம் வரை தண்ணீர் வந்ததும் அதனை தேக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருவி வீணாக வெளியேற்றப்படுகின்றது. 2022 மார்ச் 1ல் அணை பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஷட்டர் பழுது, அணையின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். பொதுப்பணி துறையினர் அணையினை பலப்படுத்தவும் 9 ஷட்டர்களையும் எடுத்துவிட்டு நவீன முறையில் புதிய ஷட்டர்களை அமைக்கவும் பரிந்துரைத்தனர். அடுத்தடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு நவீன முறையில் ஷட்டர்கள் அமைப்பதற்காக ரூ. 49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியில் ஷட்டர்கள் டிசைன் செய்யப்படும் பணி நடந்து வருகின்றது. விரைவில் இப்பணி முடிந்து அடுத்த மழைக்காலத்திலாவது அணையில் தண்ணீர் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை