உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் இறுதிக்கட்டத்தில் பாலம் கட்டும் பணி

சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் இறுதிக்கட்டத்தில் பாலம் கட்டும் பணி

சிவகாசி: சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜல்லிக்கட்டு போடப்பட்டு ரோடு போடும் பணி துவங்கியுள்ளது. சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, எரிச்சநத்தம் - சிவகாசி, சிவகாசி - கன்னிசேரி, விருதுநகர் - சிவகாசி, சாத்துார் - சிவகாசி - கழுகுமலை, சிவகாசி - ஆலங்குளம், சிவகாசி - வெம்பக்கோட்டை ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.52 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலைக்கு 2012ல் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021ல் நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கியது. சுற்றுச் சாலை பணிக்காக ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, ஆனையூர், கொங்கலாபுரம், திருத்தங்கல், கீழத்திருத்தங்கல், வெற்றிலையூரணி, நாரணாபுரம், அனுப்பன்குளம் ஆகிய 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த 82 பேரிடமிருந்து 132.8 ஹெக்டேர் நிலம், அரசு நிலம் 14.6 ஹெக்டேர் என 147.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2024- - 2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்து, சுற்றுச்சாலை பணிகளை 3 பிரிவுகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, சிவகாசி - எரிச்சநத்தம், சிவகாசி - விருதுநகர் சாலைகளை இணைக்கும் வகையில் 10.5 கிலோ மீட்டருக்கு ரோடு அமைக்க ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. 10.5 கிலோமீட்டரில் 22 பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு ரோடு போடும் மணி துவங்கியுள்ளது. இப்பணியினை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: முதற்கட்ட சுற்றுச்சாலை பணியில் பெட்டிப்பாலம், குறுக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ரோடு போடும் பணி துவங்கியுள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ