கண்மாய்கரையில் இரவில் கட்டிய கட்டடம் காலையில் அகற்றம்
சிவகாசி: சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் ஆவின் பாலகம் வைப்பதற்காக இரவோடு இரவாக கட்டிய கட்டடத்தை காலையில் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். சிவகாசி இரட்டை பாலம் விலக்கில் ஆவின் பாலகம் உள்ளது. தற்போது சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில், இரட்டை பாலம் விலக்கில் ரவுண்டானா அமைய உள்ளது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் ஆவின் பாலகத்தை அகற்றுவதற்கு நோட்டீஸ் கொடுத்தனர். ஆவின் பாலகம் நடத்துபவர் அதனை அகற்றுவதற்கு ஒத்துக் கொண்ட நிலையில், மீண்டும் வைப்பதற்கு மாற்று இடம் கொடுக்காததால் அருகிலுள்ள சிறு குளம் கண்மாய் கரையில் இரவோடு இரவாக ஆவின் பாலகம் வைப்பதற்காக கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில் கமிஷனர் சரவணன், மாநகரத் திட்டமிடுநர் மதியழகன், ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் காலையில் கட்டடத்தை மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.