| ADDED : டிச 03, 2025 05:05 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் சிறகடித்து பறந்து வரும் பட்டாம் பூச்சிகளை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் வகையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க புலிகள் காப்பகமும், மாவட்ட அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான சாம்பல் நிற அணில்கள் உள்ளதால் சரணாலயமாக திகழ்கிறது. 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, வேங்கை புலி, சிறுத்தை, வரையாடு, கடாமான், குரங்குகள், மான்கள் மற்றும் பல்வேறு வகை பட்டாம்பூச்சிகளும் உள்ளன. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் வடகிழக்கு பருவமழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து செடி, கொடிகள் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் மலையடிவாரத்தில் இருந்து உச்சி வரை ஏராளமான பட்டாம்பூச்சிகள் பல்வேறு வண்ண வண்ண நிறங்களில் சிறகடித்து பறப்பதை பார்க்க முடிகிறது. இதனை பார்க்கும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சி அடைகின்றனர். செண்பக தோப்பில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமாக ஏராளமான ஏக்கர் நிலங்கள் உள்ளதால், இங்கு அனைத்து வகை பட்டாம்பூச்சிகளையும் ஒரே இடத்தில் பார்த்து மகிழும் வகையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் மட்டுமின்றி, விருதுநகர் மாவட்ட மக்களும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு காரணியாக விளங்கும் பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். எனவே, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வேண்டுமென மக்களும், இயற்கை எதிர்பார்க் கின்றனர்.