சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு தீவிரம்
சிவகாசி:2025 ம் ஆண்டு காலண்டர் தயாரிப்பு பணிகள் சிவகாசியில் தீவிரமடைந்துள்ளன.சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல் காலண்டருக்கும் பிரசித்தி பெற்றது. இங்கு சிறிதும் பெரிதுமாக 300க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 ம் பெருக்கை முன்னிட்டு காலண்டர் உற்பத்தியாளர்கள் புதிய ஆண்டிற்கான ஆல்பத்தை தயாரித்து ஏஜன்ட்கள், வாடிக்கையாளர்கள், மக்களுக்கு அறிமுகம் செய்வர். அதன் அடிப்படையில் வரும் ஆர்டர்களுக்கு புதிய ஆண்டிற்கான மாதாந்திர, தினசரி, டேபிள் காலண்டர் தயாரிக்கும் பணிகள் துவங்கும்.நவம்பர் வரை ஆர்டர் பெறப்பட்டு டிசம்பரில் தயாரிப்பு பணிகள் வேகமெடுக்கும்.இந்த ஆண்டு விலைவாசி கட்டுக்குள் இருந்தாலும் மின் கட்டண உயர்வு, வேலையாட்களின் கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் காலண்டர் 10 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. உற்பத்தித்திறனில் இதுவரை 80 சதவீதம் வரை ஆர்டர் பெறப்பட்டுள்ளது. அதில் தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70 சதவீதம் பணிகள் முடிந்திருந்தன.வேலையாட்கள் பற்றாக்குறை, கூடுதல் நேரம் வேலை பார்க்காதது போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறும்போது டிசம்பர் இறுதிக்குள் நுாறு சதவீத ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.