வேலை வாங்கித் தருவதாக ரூ.11.50 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் வேலை வாங்கி தருவதாக ரூ.11.50லட்சம் மோடி செய்த ஜேசுராஜேந்திரன், மனைவி வெங்கடேஸ்வரி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்துார் அருகே படந்தால் வசந்தம் நகரைச் சேர்ந்த சாரதா 33. கணவர் ராணுவத்தில் உள்ள நிலையில் இவர் தனியார் பள்ளியில் பணிபுரிகிறார்.இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்த நிலையில் தோழி கவிதா மூலம் தஞ்சை தமிழ் பல்கலையில் ஒருங்கிணைப்பாளராக உள்ள சாத்துார் எஸ்.ஆர்.நாயுடு நகரைச் சேர்ந்த ஜேசுராஜேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.தன்னால் பல்கலையில் வேலை வாங்கித் தர முடியும் என ஆசை வார்த்தைக் கூறிய அவர், அங்கு உதவியாளர் பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், அதற்கு முன்பணம் கொடுக்க வேண்டும் என மனைவி வெங்கடேஸ்வரியுடன் சேர்ந்து 2016ல் ரூ. 2 லட்சம் பெற்றார்.பின்னர் 2017 ல் ரூ.5 லட்சம், 2018 ல் ரூ.4.5 லட்சம் என மொத்தம் ரூ.11.5 லட்சம் பெற்றுக்கொண்டு அரசு வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றியுள்ளனர்.மேலும் சாரதாவின் பெரியம்மா மகன் சாதுசிங், ஜேசுராஜேந்திரன் நடத்திய டூட்டோரியல் கல்லுாரியில் பிளஸ் 2 படித்த நிலையில் அவருக்கு போலிச் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து ஜேசுராஜேந்திரன், மனைவி வெங்கடேஸ்வரி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.