ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சகோதரர்களிடம் ரூ.11.5 லட்சம் மோசடி; பெண் உட்பட மூவர் மீது வழக்கு
சாத்துார்; விருதுநகர் மாவட்டம் சாத்துார் அண்ணன் தம்பியிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 11.5 லட்சம் பணம் மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.சாத்துார் வெங்கடாசலபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் மகேந்திரா ராஜா, 35. இவர் 2020ல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த படி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வந்தார். அவருடன் பணிபுரிந்தவர் தேவா. திருவாரூரை சேர்ந்த ரம்யா பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளார். அவரிடம் பணம் கொடுத்தால் உங்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் என தேவா கூறினார்.இதன் பின்னர் ரம்யாவை மகேந்திர ராஜாவுக்கு தேவா அறிமுகம் செய்தார். நாமக்கல்லில் ரம்யா சொந்தமாக டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நடத்துவதாகவும் அங்கு ரயில்வே துறையில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் சிவ ராமன் வருவார் என்றும் அவரிடம் பணம் கொடுத்தால் ரயில்வே துறையில் கமர்சியல் கிளர்க் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.மகேந்திரராஜா 2020 பிப்.,18, 25, 28ல் ஜி பே மூலம் ரம்யாவுக்கு ரூ. 3லட்சம் அனுப்பினார். ரூ. 4லட்சத்தை 2020 மார்ச் 4ல் நாமக்கல் சென்று ரம்யாவிடம் நேரில் கொடுத்தார்.தனது தம்பி முரளிக்கு அலுவலக உதவியாளர் பணிக்காக ரூ 4.5 லட்சத்தை சிவராமனுக்கு ஜி பே மூலம் . 2020 மே 6, செப்.,10, 12, 30 அக்., 2 ஆகிய தேதிகளில் அனுப்பினார்.இருவருக்கும்வேலை வாங்கித் தராததோடு பணத்தை கேட்டதற்கு ரம்யா கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, தேவா, ரம்யா, சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்துார் ஜே எம் 1 நீதிமன்றத்தில் மகேந்திர ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவுபடி சாத்துார் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.