தேர்வறையில் நாகப்பாம்பு மாணவர்கள் அலறி ஓட்டம்
திருச்சுழி:விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பின்புறம் சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மையமாக உள்ளது. நேற்று பள்ளியில் பிளஸ் 1 கணக்கு பதிவியியல், வேதியியல் பாட தேர்வு நடந்து கொண்டிருந்தது. பள்ளி ஆய்வக அறையில் மாற்றுத்திறன் மாணவர்கள், அவர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.காலை, 11:35 மணியளவில் நாகப்பாம்பு ஒன்று தேர்வு அறைக்குள் நுழைந்ததை பார்த்து, அவர்கள் அலறியடித்து வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.