| ADDED : டிச 03, 2025 05:04 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கான ரூ.250 கோடி வரை பட்டாசு வர்த்தக இழப்பும் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. அவ்வப்போது பெய்த மழை, அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2025 தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி குறைந்தது. அதே நேரத்தில் தீபாவளிக்கு உற்பத்தியான பட்டாசுகள் முழுமையாக விற்பனையானது. பட்டாசு ஆலைகள், கடைகள் என எங்குமே பட்டாசுகள் இருப்பும் இல்லை. 2026 தீபாவளிக்காக அக்., 25 முதல் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் உற்பத்தியை துவக்கின. அதே நேரம் அடுத்தடுத்து பெய்த மழையால் 20 நாட்களுக்கு மேலாக பட்டாசு ஆலைகள் இயங்காததால் பட்டாசு உற்பத்தி செய்யப்படவில்லை. எப்பொழுதுமே தீபாவளி முடிந்த பின் ஓரளவிற்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும். இந்த ஆண்டு பட்டாசு இருப்பு இல்லாத நிலையில் உற்பத்தி செய்தால் மட்டுமே கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் 10 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு முழுமையான பட்டாசுகளை அனுப்ப வழியில்லை. இதனால் ரூ. 200 முதல் 250 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.