சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி: மக்கள் அச்சம்
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி பஸ் ஸ்டாப்பில் சேதமடைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி ரைஸ் மில் பஸ் ஸ்டாப் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் இருந்து இப்பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தொட்டி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அனைத்து துாண்களிலும் சிமெண்ட் பெயர்ந்து தொட்டி கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. தவிர தொட்டியின் மேற்பகுதியும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இத்தொட்டி அருகே பஸ் ஸ்டாப், கடைகள், குடியிருப்புகள் இருப்பதால் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். தற்போதும் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. மக்கள் நடமாடும் போது தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.