குன்னுார் ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் சேதமடைந்த பயணியர் நிழற்குடை
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் சேதமடைந்து காணப்படும் பயணியர் நிழற்குடையை இடித்துவிட்டு புதிய நிழற்குடை கட்ட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்த மருத்துவமனையில் குன்னூரை சுற்றியுள்ள கிருஷ்ணன் கோவில், போக்குவரத்து நகர், புதூர், கல்யாணி புரம், காடனேரி, கலிங்கப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களின் வசதிக்காக மருத்துவமனை வாசலில் ஒரு பயணியர் நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சிகிச்சை பெற வருபவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், தற்போது இந்த நிழற்குடை சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற அபாயநிலையில் உள்ளது. இந்நிலையில் இதனை ஒருவித அச்சத்துடனே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த நிழற்குடையை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.