உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி கோயிலில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி பக்தர்கள் எதிர்பார்ப்பு

இருக்கன்குடி கோயிலில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி பக்தர்கள் எதிர்பார்ப்பு

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி , ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். தை, ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பாதயாத்திரையாக பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை தங்கி செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. காய்ச்சல், தலைவலி வயிற்றுப்போக்கு கால் வலி என அவதிப்படும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் நெஞ்சு வலி மூச்சு திணறல் என பக்தர்கள் மயங்கி விழுகின்றனர் . அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை பெற பக்தர்களுக்கு கோயிலில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லவும் தனியார் மருத்துவமனைக்கு செல்லவும் உரிய வாகன வசதியில்லை. இதய நோயால் பாதிக்கப்படும் பக்தர்கள் மேல் சிகிச்சைகாக மருத்துவமனைக்குச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ்களை நாடிச் செல்லும் நிலை உள்ளது. சாத்துாரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ்கள் வருவதற்குள்ளாக அவர்கள் மிகவும் சிக்கலான நிலைக்கு ஆளாகி விடுகின்றனர். கோயில் வளாகத்தில் நிரந்தரமான ஆம்புலன்ஸ் வசதிஇருந்தால் பக்தர்கள் உடனடியாக உரிய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கணக்கில்கொண்டு மாரியம்மன் கோயிலில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ