செண்பகத் தோப்பில் யானைகள் நடமாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் தினமும் யானைகள் நடமாட்டம் தொடர்வதால் வனத்துறையினர் திணறி வருகின்றனர். விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.கடந்த சில வாரங்களாக செண்பகத் தோப்பு மலையடிவார தோப்புகளையும் கடந்து மம்சாபுரம் கண்மாய் பகுதிகள் வரை யானைகள் வந்து, தோப்புகளை சேதப்படுத்தியது. இதனையடுத்து வனச்சரகர் செல்வமணி தலைமையிலான வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.ஆனாலும் நேற்று முன்தினம் வரை யானைகள் தோப்புகளில் புகுந்து மா, தென்னை வாழை மரங்களை சேதப்படுத்தின.வனத்திற்குள் யானைகளை விரட்டுவதும், யானைகள் திரும்பி வருவதும் தொடர்ந்து நீடிப்பதால் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் செண்பகத்தோப்பு, ராக்காச்சியம்மன் கோயில், அத்திதுண்டு பகுதி விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.