உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்க எதிர்பார்ப்பு

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்: பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யாமல் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 டிச.31ல் முடிந்தது. விடுபட்டவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயரை பதிவு செய்தால் மட்டுமே முழுமையான சான்றிதழாகும். பள்ளியில் சேர்வதற்கு, வாக்காளர் , அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், விசா , வெளிநாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாகும். இந்த பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயரை பதிவு செய்யாமல் இருந்தால் பிறந்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோர், காப்பாளர் எழுத்து பூர்வமாக உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் கொடுத்து கட்டணமின்றி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஓராண்டிற்கு மேல் 15 ஆண்டிற்குள் பெயரை பதிவு செய்யாமல் இருந்தால் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். மேலும் 2000 ஜன.1 க்கு முன் பிறந்து பெயர் இல்லாமல் சான்றிதழ் பெற்றவர்கள் பெயரை சேர்த்து கொள்ள 2019 டிச.31 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக பள்ளி, ஆதார் சான்றிதழ், ரேஷன் கார்டு நகல் கொடுத்து அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டது. இவற்றில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க மூன்று முறை அவகாசமும், இறுதியாக 2024 டிச.31 வரை பெயரை பதிவு செய்து சான்றிதழ் பெற மத்திய அரசு காலஅவகாசம் வழங்கியது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த பகுதிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் விடுபட்ட பலர் சான்றிதழில் பெயர் சேர்க்கவில்லை. இதனால் ஆதார் திருத்தம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை எடுப்பதில் பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் வழங்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ