ஏழாயிரம் பண்ணையில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க எதிர்பார்ப்பு
சாத்துார் : ஏழாயிரம் பண்ணையில் பத்திர பதிவு அலுவலகம் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஏழாயிரம் பண்ணையில் வணிக நிறுவனங்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பட்டாசு தொழிற்சாலைகள் மேலும் விவசாய பணிகளும் , பிளாட் விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது.ஏ ழாயிரம் பண்ணை, சிப்பிப்பாறை, கரிசல்பட்டி, சத்திரம், கங்கரக்கோட்டை ஊராட்சி,சங்கரபாண்டியாபுரம்,பகுதிகளில் தற்போது நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் பத்திரப்பதிவுக்கு சாத்துார் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாத்துார் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து பத்திரத்தை பதிந்து விட்டு திரும்பி செல்ல ஒரு நாள் ஆகிவிடுகிறது.நிலத்தை வாங்குபவர்களும் விற்பவர்களும், சொத்தின் மீது அடமானம் பெறுபவரும் அடமானம் தருபவரும் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெம்பக்கோட்டை தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டு உள்ளதால் வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை மக்களும் எளிதில் வந்து செல்லக்கூடிய ஏழாயிரம் பண்ணையில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க வேண்டும் சொத்துக்களையும் வாங்குபவர்களின் நேரமும் காலமும் மிச்சமாகும்.