உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முடுக்கன்குளத்தில் கருப்பு நிறத்தில் கண்மாய்க்கு வரும் நீரால் அச்சம்

முடுக்கன்குளத்தில் கருப்பு நிறத்தில் கண்மாய்க்கு வரும் நீரால் அச்சம்

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் மழை நேரத்தில், தனியார் மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலை பகுதியிலிருந்து ஓடை வழியாக வரும் மழைநீர் கருப்பு நிறத்தில் கண்மாய்க்கு வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.காரியாபட்டி முடுக்கன்குளத்தில் தனியார் மருத்துவ கழிவு எரியூட்டும் ஆலை செயல்பட்டு வந்தது. கழிவுகளை எரிக்கப்பட்டு சாம்பலை அப்பகுதியில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். எரியூட்டும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையினால் காற்றில் மாசு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் எரியூட்டும் ஆலை செயல்படக் கூடாது என பல கட்ட போராட்டங்களை நடத்தியும், வழக்கு தொடர்ந்தும் ஆலை செயல்படுவதை நிறுத்தினர்.இது ஒரு புறம் இருக்க அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள சாம்பல் காற்றில் பரவி பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மழை நேரங்களில் அப்பகுதியில் பெய்யும் மழை நீர் கருப்பு நிறத்தில் ஓடை வழியாக கண்மாயில் கலப்பதால் நீரும் கருப்பாக மாறி விடுகிறது. இதனால் மண்வளம் கெடுவதுடன், விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விளை நிலங்கள் பாதிக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீரில் கலக்கும் ஆபத்து உள்ளது. மருத்துவக் கழிவு எரியூட்டும் பகுதியில் இருந்து வரும் மழை நீர் சாம்பல் கண்மாய்க்கு வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை