வெட்டு காயங்களுடன் இறந்துகிடந்த பட்டாசு தொழிலாளி
விருதுநகர்: விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி பழனிமுருகன் 43, வெட்டு காயங்களுடன் ஆலை வளாகத்தில் இறந்த கிடந்தார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி பழனிமுருகன். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி உள்ளது. இவரின் இரண்டாவது மனைவி பிரிந்து சென்றதால் தற்போது முதல் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆனால் குடும்பத்தினருடன் சரியான பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பதால் தனியார் பட்டாசு தயாரிப்பு ஆலை வளாகத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திய பழனிமுருகனை, அவரது சகோதரர் டூவீலரில் அழைத்து வந்து ஆலை வளாகத்தில் விட்டு சென்றார். நேற்று காலை 7:45 மணிக்கு பணிக்கு வந்த சக தொழிலாளர்கள் பார்த்த போது தகர செட்டில் கட்டிலில் பழனிமுருகன் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஆமத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.