அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
விருதுநகர்: ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம் (எச்.எம்.ஐ.எஸ்) ஜூன் முதல் துவக்கப்படவுள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளி நோயாளிகளுக்கு பதிவுச்சீட்டு மட்டுமே கணினியில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. அதன் பின் டாக்டர்களை அணுகுவது, மருந்துகள் என அனைத்தும் எழுத்து பூர்வமாக பதிவு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து செயல்பாடுகளையும் கணினி மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதற்காக மருத்துவமனை மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டு ஜூன் முதல் பணிகள் துவக்கப்படவுள்ளன. இத்திட்டத்தில் வெளி நோயாளிகள் விவரங்கள் கணினியில் பதிவு செய்து தனி எண் கொண்ட பதிவுச்சீட்டு வழங்கப்படும்.அதன் பின் நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் விவரங்களை டாக்டர்கள் கணினியில் பதிவு செய்து மருந்தகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு சென்று பதிவுச்சீட்டை மட்டும் நோயாளிகள் காண்பித்தால் போதும் மருந்து, மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.இதன் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமாக்கப்படவுள்ளது. மேலும் இத்திட்டம் ஏற்கனவே செயல்படும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை மேலாண்மை 2.0 பணிகளும் துவங்கப்படவுள்ளன.