கர்ப்பிணிகள் மருத்துவ தரவுகள் திரட்டி மகப்பேறு உயிரிழப்புகளை தடுக்க புது ரூட்
விருதுநகர்: கர்ப்பிணிகளை தொடர்ந்து கண்காணித்து அந்தந்த அரசு மருத்துவமனைகள், வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வாரம் ஒரு முறை மருத்துவ தரவுகள் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பிரசவத்திற்கு முன்பாக மருத்துவ நிலை அறிந்து மகப்பேறுவின் போது நிகழும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட தலைமை, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை, சிகிச்சை பெற்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் மகப்பேறுவின் போது நிகழும் தாய், சேய் உயிரிழப்புகள் கணிசமான அளவில் உள்ளன. இதற்காக ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்பட்டாலும் உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்ந்து நடந்து வருகிறது.இதை தடுப்பதற்காக கர்ப்பிணிகளின் பரிசோதனை, சிகிச்சை குறித்து தரவுகளாக திரட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட தலைமை, வட்டார மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வாரம் ஒரு முறை அனுப்பப்படும்.இதன் மூலம் பிரசவத்தின் போது அனுமதிக்கப்படுவர்களின் உடல்நிலையை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் மகப்பேறு உயிரிழப்புகளை தடுக்க முடியும். மேலும் அவசர உதவி தேவைப்படுவோரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இந்த முறை அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.